மன்னார் மருதமடு திருத்தலத்தில் மடு அன்னைக்கு முடி சூடப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியான நிலையில் இன்று(02) விசேட திருப்பலி ஆராதனைகள் நடைபெற்றன.
கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் அழைப்பின் ஆயர்கள் பலர் கூட்டுத் திருப்பலியில் பங்கேற்றனர்.
அன்னையின் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வௌிநாடு மற்றும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
நாட்டின் பாதுகாப்பு பிரிவு பிரதானிகள், அரச உயர் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
அனைத்து மக்களும் தமது தனித்துவங்களை வலுவாக பேணுவதற்கான கட்டமைப்புகள் தயாரிக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதன்போது தெரிவித்துள்ளார்.