இலங்கையில் (Sri lanka) பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.அதன்படி தப்பிச் சென்றவர்கள் டுபாயிலும் (Dubai), பிரான்ஸின் (France) நான்கு இடங்களிலும் மறைந்திருப்பதாக காவல்துறை தலைமையகம் (Police Headquarters) சுட்டிக்காட்டியுள்ளது.இந்த நிலையில் இவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் நாட்டில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இடம்பெறும் 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 43 பாதாள உலகக் குழுக்கள் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ளதாகவும், அந்தக் குழுக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் சுமார் 1091 பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.