ஆந்திரா (Andhra Pradesh) – திருப்பதி (Tirupati) , சாதுபேட்டை பகுதியில் சீருடையில் இருந்த தலைமை காவல்துறை அதிகாரி ஒருவரை கட்டையால் தாக்கிய சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் நேற்றைய தினம் (20) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஆந்திரா, கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் தாஸ். இவரும், அவருடன் பணிபுரியும் காவலர் ஒருவரும் சேர்ந்து சாதுபேட்டை பகுதிக்கு வழக்கு ஒன்றின் விசாரணை காரணமாக சென்றுள்ளனர்.
காவல்துறை விசாரணை
அப்போது உணவகம் ஒன்றின் முன் மோட்டார் வாகனத்தை நிறுத்தி, தாஸ் உள்ளே சென்ற போது, திடீரென அங்கிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் விறகு கட்டையை கொண்டு காவலரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான காவல்துறை அதிகாரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பினனர், தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாணைகளின் போது, அவருக்கு காவல்துறை சீருடை பிடிக்காது என்றும், காவல்துறை சீருடையில் யாராவது வந்தால் அவர்களை சரமாரியாக தாக்குவார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த நபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளதுடன், அவருக்கு இதுபோன்ற குறை இருக்கிறதா அல்லது நடிக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.