திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமது தந்தையான கலைஞர் கருணாநிதியின் மறைவையடுத்து, 2018 ஆம் ஆண்டில் தி.மு.க கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
2019 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு தனது கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
அதன் பின்னர் 21 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களை எதிர்கொண்டு, தி.மு.க கட்சிக்கு மு.க.ஸ்டாலின் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், இந்திய மக்களவைத் தேர்தல் நிறைவுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான INDIA கூட்டணி 39 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று அமோக வெற்றி பெறும் எனத் தெரிகிறது.
புதுச்சேரியிலும் காங்கிரஸ் தலைமையிலான INDIA அணி முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த ஆண்டு 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளன.