வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் வெடிமருந்து துப்பாக்கிகள் வழங்கும் எல்லையை 5 ஏக்கரில் இருந்து 2 ஏக்கராக குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர்ச் சேதங்கள் அதிகரித்துள்ளதாக விவசாயிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
தென்னை, மரக்கறிகள், பழங்கள் என ஏறக்குறைய அனைத்துப் பயிர்களுக்கும் குரங்குகளினால் ஏற்பட்ட சேதத்தினால் தோட்டங்களில் இருந்து பெறக்கூடிய முழு அறுவடையையும் இழந்துள்ளதாக விவசாயிகள் அமைச்சரிடம் தெரவித்துள்ளனர்.
பிரச்சினைகள்
இந்த நிலையில், கேகாலை, கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவசாய அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
அதன் போது, சுமார் 800 தேங்காய்களை அறுவடை செய்த தமது தோட்டங்களில் 100 தேங்காய்களைக் கூட அறுவடை செய்ய முடியாத அளவுக்கு பயிர்களை அழித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.