ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பறிக்கப்பட்ட அமைச்சுப் பதவி
முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னர் இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த நிலையில், அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டமையால் அமைச்சுப் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டன.
இதன்படி, இந்த அமைச்சுப் பதவிகளை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி
மனுஷ நாணயக்காரவின் (Manusha Nanayakkara) வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் காலி மாவட்ட விருப்புப் பட்டியலில் மனுஷ நாணயக்கார இரண்டாவது இடத்தைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில், அவர் பதவி விலகியுள்ளதால் விருப்பு பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பந்துல லால் பண்டாரிகொடவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது