பல ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் வௌ்ள அபாய மட்டத்திலேயே காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கை மில்லகந்த பகுதியில் சிறிய அளவிலான வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிங் கங்கை தவளம பகுதியில் வௌ்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளது.
நில்வளா கங்கை தல்கஹகொட மற்றும் பானதுகம பகுதிகளில் வௌ்ள அபாய நிலையை எட்டியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்தனகலு ஓயா தூணமலையில் வௌ்ள அபாய மட்டத்தில் உள்ளது.
இதனிடையே, 6 பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தப்போவ, உடவளவ, தெதுறு ஓயா ஆகியன இவற்றில் உள்ளடங்குவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் பெய்த பலத்த மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 10 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது.
இந்தநிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பலத்த மழை காரணமாக நாடளாவிய ரீதியில் 11949 குடும்பங்களைச் சேர்ந்த 44627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2335 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
21 வீடுகள் முழுமையாகவும் 4472 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் பலத்த மழை மற்றும் கடுங்காற்றுடனான வானிலை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.