எதிர்வரும் இரு வாரங்களுக்குள் சாதகமான தீர்வினை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் – அதிபர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த தகவலை இலங்கை ஆசிரியர் – அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க ( Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், நிதியமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சர் (Education minister), ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சனிக்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை ஆசிரியர் – அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்மானம் கிடைக்கவில்லை.
ஆகவே திங்கட்கிழமை முதல் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில் ஈடுபடுவார்கள்.
இவ்விரு வாரங்களுக்குள் சாதகமான தீர்வினை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானிப்போம்.
சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது.